Friday, September 30, 2016

சின்ன சின்ன

'வானிலிருந்து ரோஜா மலர்களை அள்ளித் தெளிக்கும்
எங்கள் சின்ன ராணி குழந்தை தெரசா...'

ஒவ்வொரு திருப்பலி நடு செபத்திலும் இப்படித்தான் சிறுமலர் குழந்தை தெரசம்மாளை வாழ்த்தி செபிப்பார் எங்கள் குருமட முன்னாள் அதிபர் அருள்தந்தை. ஹெர்மஸ் மொடுதகம் அவர்கள்.

நாளை இந்த சின்ன ராணியின் திருநாள்.

நாளை அக்டோபர் திங்கள் முதல் நாள். அக்டோபர் திங்களை நாம் செபமாலை திங்கள் என சிறப்பிக்கின்றோம்.

நாம் பத்து நாட்களாக முதல் வாசகதத்தில் வாசித்துக் கொண்டுவந்த யோபு நூல் நாளை நிறைவடைகிறது.

'யோபின் முன்னைய நாள்களில் இருந்ததைவிட பின்னைய நாள்களில் ஆண்டவர் அதிகமாக ஆசி வழங்கினார்' என்று சொல்கிறார் ஆசிரியர்.

யோபிற்கு மூன்று மகள்கள் பிறக்கின்றனர்.

முதலாமவள் 'எமிமா' - 'எம்' என்றால் 'நாள்' அல்லது 'பகல்.' 'எமிமா' என்றால் எபிரேயத்தில் 'பகலைப்போல பளிச்சென்று இருப்பவள்' என்று பொருள்.

இரண்டாமவள் 'கெட்சியா' - 'கெட்சியா' என்றால் 'இலவங்கம்' அல்லது 'ஏலக்காய்' என்பது பொருள். ஏலக்காய் போல மணமானவள் இவள்.

மூன்றாமவள் 'கேரன்ஹப்புக்' - 'கேரன்ஹப்புக்' என்றால் கண்மை என்பது பொருள்.

மூன்று மகள்களின் பெயர்களும் 'அழகு' அல்லது 'இனிமை'யோடு தொடர்புடையவை.

2016ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்கள் இன்றுடன் நிறைவடைகின்றன. நாளை நாம் தொடங்கும் புதிய மாதத்தில் முன்னைய நாள்களை விட ஆண்டவர் இன்னும் அதிகம் ஆசி வழங்கக் காத்திருக்கிறார்.

நாளைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 10:17-24), 'உங்கள் பெயர் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கிறது என்று மகிழுங்கள்' என தன் சீடர்களிடம் சொல்கிறார் இயேசு.

சின்ன ராணி குழந்தை தெரசாவும் தன் அப்பாவிடம் வானத்து நட்சத்திரங்களைக் காட்டி அங்கே தன் பெயர் எழுதப்பட்டிருப்பதாகச் சொல்வாள்.

இளவல் - அழகி - சின்ன ராணி.

இவளின் மறைபரப்பு தாகத்தாலும், இவளின் எழுத்துக்களாலும் இந்த இளவலை 'மறைவல்லுநர்' எனவும், 'மறைபோதகப் பணியின் பாதுகாவலி' எனவும் அழைக்கிறது திருஅவை.

வாழ்வின் பெரிய விஷயங்கள் சின்னஞ்சிறியவற்றில்தான் இருக்கின்றன என்பதை உணர்த்தியவள் இந்த சின்ன ராணி.

சின்ன சின்ன வழிகள் வழியாகவே வாழ்க்கை.