Thursday, July 28, 2016

மார்த்தா

நாளை மார்த்தாவின் திருநாள்.

பெத்தானியா இயேசுவுக்கு இரண்டாம் வீடு.

பெத்தானியா வீட்டின் இல்லத்தரசி மார்த்தா. மார்த்தாவை நினைக்கும் போதெல்லாம் அவரை மரியா மற்றும் லாசருக்கு அக்கா என்ற நிலையில் வைத்துப் பார்க்க வேண்டும் என்றே தோணும்.

அக்காவுக்குப் பின் பிறந்த தம்பி அல்லது தங்கைக்கு எப்போதும் இரண்டு அம்மாக்கள். ஒன்று, தாய். இரண்டு அக்கா. அக்காக்கள் வீடுகளில் குட்டி அம்மாக்களாகவே இருக்கிறார்கள்.

இயேசுவை தன் இல்லத்திற்கு வரவேற்றவர் இந்தக் குட்டி அம்மா மார்த்தாதான்.

தன் சகோதரன் இறந்த செய்தி கேட்டு இயேசு வந்தபோது அவரை நோக்கி ஓடிச் சென்றதும் இந்தக் குட்டி அம்மாதான்.

இரண்டு முறை மார்த்தா பேசுகின்றார் நற்செய்தி நூல்களில்:

அ. 'என்னோடு வேலை செய்யும்படி என் சகோதரியை என்னுடன் அனுப்பி வையும்!'

இயேசுவிடம் எந்தவித இனிஹிபிஷனும் இல்லாமல் பேசுகிறார் மார்த்தா. 'இயேசு என்ன நினைப்பார்?' என்ற கவலை அவருக்கு இருந்ததே இல்லை.

ஆ. 'நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்!'

இயேசுவை எப்போதும் தன்னுடன் வைத்துக்கொள்ளவும், அவர் தன்னுடன் இறந்தால் தனக்கும், தன் இல்லத்திற்கும் எதுவும் நெருங்காதும் என்றும் அலாதி நம்பிக்கை கொள்கிறார்.

இயேசுவுக்கு அவரின் அம்மா மரியா முதல் பிறப்பைத் தருகின்றார்.

இந்தக் குட்டி அம்மா அவருக்கு இரண்டாம் பிறப்பைத் தருகின்றார்.

மரியா வழியாக இயேசு இந்த உலகிற்கு வந்தார்.

மார்த்தா வழியாக இயேசு நம் வீட்டிற்கு வரும் அளவுக்கு நெருக்கமாகிறார்.

இறுதியாக,

'பலவற்றைக் குறித்துக் கவலைப்பட்டவர் மார்த்தா!'

இதுதான் நம் வாழ்வின் எதார்த்தம்.

இயேசுவின் காலடியில் அமர்ந்து அமைதியாக இருக்கும் தங்கை மரியாவைப் போல வாழ்க்கை நம் அனைவருக்கும் அமைவதில்லை.

நாம் இவ்வுலகில் வாழும் வரை மார்த்தா போல ஓடிக்கொண்டேதான் இருக்கின்றோம்.

இன்று நாம் பலவற்றைக் குறித்துக் கவலைப்படவேண்டிய அவசியத்தில் இருக்கிறோம்.

கவலைகள்தாம் வாழ்க்கை.

ஆக, கடவுளின் பாதம் அமர்வதை விடுத்து இன்னும் கொஞ்சம் கவலைப்படுவோம்!

மார்த்தாவின் கவலைகளும் இயேசுவை மையப்படுத்தியேதான் இருந்தன!