Wednesday, July 24, 2019

புனித யாக்கோபு

இன்றைய (25 ஜூலை 2019) திருநாள்

புனித யாக்கோபு

இன்று திருத்தூதரான புனித யாக்கோபுவின் திருநாளைக் கொண்டாடி மகிழ்கிறோம்.

இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களில் இயேசுவுக்கு மிக நெருக்கமான முதல் வட்டத்தில் இருந்த மூன்று திருத்தூதர்களில் - பேதுரு, யாக்கோபு, யோவான் - ஒருவர் இவர். இயேசுவுக்கு உறவினர். செபதேயுவின் மூத்த மகன். 'என்னைப் பின்பற்றி வாருங்கள்!' என்று சொன்னவுடன், வலைகளையும், படகுகளையும், படகுகளோடு தந்தையையும் வேலையாள்களையும் விட்டுவிட்டு வந்தவர்.

இயேசுவுக்கு வலப்புறம் அல்லது இடப்புறம் அமர விரும்பியவர்.

இந்த நிகழ்வைத்தான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்கிறோம்.

'நான் குடிக்கும் கிண்ணத்தில் நீங்களும் குடிக்க முடியுமா?' என்று இயேசு கேட்க, 'முடியும்' என்று சொன்னதோடு குடித்தும் காட்டியவர்.

ஸ்பெயின், போர்ச்சுகல், மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளில் மிகவும் அதிகமாக வணக்கம் பெறுபவர். எருசலேம் திருஅவையின் தலைவர். தொடக்கத்திருச்சபையின் விருத்தசேதன பிரச்சினையை மிக அழகாகக் கையாண்டு தீர்வு கண்டவர்.

இயேசுவின் அருகில் ஆசை கொண்டதால் மற்ற பத்துப்பேரின் கோபத்திற்கு ஆளானவர்.

இவர் கேட்டது சரியா அல்லது தவறா என்று தெரியவில்லை. ஆனால், இயேசுவின் அருகில் அமர நினைப்பது சரியே!

1 comment:

  1. இயேசு குடிக்கும் கசப்பான கிண்ணத்தில் தன்னாலும் குடிக்க இயலும் என்று வெளிப்படுத்திய ஒருவர், இயேசுவின் வலப்புறம் அல்லது இடப்புறம் அமர விரும்பியதில் என்ன தப்பு இருக்க முடியும்?.அழுத பிள்ளைக்குத் தானே பால்! “ தேடுங்கள்... நீங்கள் கண்டடைவீர்கள்” என்பது தானே விவிலிய வாசகம்!.இயேசுவின் வார்த்தைகள் செவிகளில் விழுந்தவுடன் வலைகளையும்,படகுகளையும்,தன்னைச்சார்ந்த அனைவரையும் விட்டு வந்த ஒருவருக்கு இயேசுவுக்கு அருகில் அமர அத்தனை தகுதியும் இருக்கிறது என்றே எண்ணுகிறேன்.நாமும் கூட வாழ்வின் பல கட்டங்களில் ஒரு நற்செயலை செய்ய வாய்ப்பு கிட்டுகையில் அவர் என்ன நினைப்பார்? இவர் என்ன நினைப்பார்? யார் கோபத்திற்கும் ஆளாகி விடுவோமோ எனும் எதிர்மறை உந்துதல்களால் வாழ்வில் பல படிக்கட்டுகளைக் கோட்டை விட்டிருப்போம்.அத்தகையோருக்கு தூய யாக்கோபு யாக்கோபு ஒரு விழிப்புணர்வைத்தருவாராக! அவர் கேட்டார்....அமர்ந்தார்...அவ்வளவே! சிப்பிக்குள் முத்தாய் ஒரு பதிவு.தந்தைக்கு என் பாராட்டுக்கள்!!!

    ReplyDelete