Tuesday, July 2, 2019

திருத்தூதர் தோமா

இன்றைய (3 ஜூலை 2019) திருநாள்

திருத்தூதர் தோமா

இன்று திருத்தூதர் தோமாவின் திருநாளைக் கொண்டாடுகிறோம். இயேசுவின் சமகாலத்தவர் ஒருவர், இயேசுவோடு வாழ்ந்த, பணி செய்த, அவரின் விலாவிலேயே கையிடும் பேறு பெற்ற தோமா நாம் வாழும் இந்தத் தமிழ் மண்ணில் வந்து நின்றார் என்று நினைக்கும்போதே ஆச்சர்யமாக இருக்கிறது.

எருசலேமுக்கும் கோழிக்கோட்டிற்குமான தூரத்தை அவர் கடந்த விதம், மேற்கொண்ட பயணம், பயணத்தில் சந்தித்த சவால், புதிய வாழ்விடம், புதிய கலாச்சாரம், மொழி, உணவுப்பழக்கவழக்கம், மனித உருவம் என அனைத்துமே புதிதாய் அவருக்கு இருக்க, இந்தப் புதிய இடத்தில் அவர் காலூன்றி நற்செய்தி அறிவித்ததும் ஆச்சர்யமாக இருக்கிறது.

'திதிம்' என்பது இவருடைய பெயர். 'திதிம்' என்றால் 'இரட்டை' என்பது பொருள். வாழ்வின் எதார்த்தங்கள் எல்லாமே இரட்டையில்தான் இருக்கின்றன: ஆண்-பெண், பகல்-இரவு, நன்மை-தீமை, ஒளி-இருள், பிறப்பு-இறப்பு, மகிழ்ச்சி-துன்பம். தோமாவிடமும் இந்த இரட்டைத்தன்மை இருந்தது. ஒரு கட்டத்தில் 'வாருங்கள், நாமும் சென்று அவரோடு இறப்போம்' என்கிறார். மறு கட்டத்தில் நம்புவதற்கே தயக்கம் காட்டுகிறார். ஆனால், இந்த இரண்டையும் ஒன்றோடொன்று சமரசம் செய்து கொள்ளாமல் அப்படியே எடுத்துக்கொள்கின்றார்.

நாம் பல நேரங்களில் இரட்டைத்தன்மையை ஒற்றைத்தன்மையாக்க முயற்சி செய்கின்றோம். அது தவறு என்றே நான் சொல்வேன். பிறப்பு மட்டுமே இருக்க முடியுமா? இறப்பு என்ற அதன் அடுத்த பக்கமும் அவசியம்தானே. இரட்டைத்தன்மையை ஒன்றாக்க முயலும்போதுதான் விரக்தி வந்துவிடுகிறது. 'நன்மை,' 'ஒளி,' 'மகிழ்ச்சி' ஆகியவை மட்டுமே சரி என நினைத்து மற்றதை விடுவதால் நாம் அடுத்ததை விரும்பத்தகாதது ஆக்கிவிடுகிறோம்.

திதிம் நம்மிலும் ஒருவர்.

ஐயம் கொண்ட இவரின் மற்றொரு குணம் சரணாகதி.

இரண்டும் அவசியம்தான் இறை-மனித உறவில்.

1 comment:

  1. ‘ தோமா’ .... சந்தேகம் மற்றும் சரணாகதிக்கு எடுத்துக்காட்டாக நிற்கும் ஒரு திருத்தூதர்.ஒன்றுக்கொன்று மாறுபட்ட இரு குணாதிசயங்களுக்குப் பெயர்’ ‘இரட்டைத்தன்மை’ எனில் இது நம் அனைவருக்குள்ளுமே ஒளிந்துள்ளது என்பதே நிதர்சனம்.நன்மை, ஒளி, மற்றும் மகிழ்ச்சி ....இவை உயர்ந்து தெரிய வேண்டுமெனில் அங்கே தீமையும்,இருட்டும்,சோகமும் சேர்ந்தே நிற்க வேண்டும்.இவை இரண்டையுமே வாழ்வில் ஒன்றாகப் பார்த்த காரணத்தினாலேயே தோமாவால் நாடு விட்டு நாடு வந்து இறைபரப்பு செய்ய முடிந்தது.” சந்தேகத்தோமையார்” என அறியப்பட்டாலும் “ இறை நம்பிக்கைக்கும்” இவரே எடுத்துக்காட்டு. இவரின் பெயரைத் தாங்கி நிற்கும் எண்ணற்ற நிறுவனங்கள்,ஆலயங்கள்,கல்லூரிகள் மற்றும் பள்ளிகளே இவரின் மாட்சிக்கு எடுத்துக்காட்டு.இறை- மனித உறவில் ஐயம் மற்றும் சரணாகதி...இரண்டுமே அவசியம் தான் எனப் பறைசாற்றும் ஒரு பதிவைத் தந்த தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete