Sunday, April 6, 2014

கண் கசக்கும் கடவுள்

உலகின் மிகப்பெரிய சொகுசுக் கப்பல் 'டைட்டானிக்' தன் கன்னிப் பயணத்திலேயே பனிப்பாறையில் மோதி மூழ்கிக் கொண்டிருந்த அந்தக் குளிர் இரவு. ஏப்பிரல் 15, 1912. 1500க்கும் மேற்பட்டோர் வாழ்வுக்கும், சாவுக்கும் இடையே போராடிக்கொண்டிருந்த போது அனைவரின் உதடுகளிலும் ஓடிய ஒரு பாடலாக 'டைட்டானிக்' திரைப்படத்தில் நாம் காணும் பாடல் இதுதான்: நியரர் மை காட் (என் இறைவன் அருகில் நான்). இந்தப் பாடலை எழுதியவர் சாரா ஃப்ளவர் ஆதம்ஸ். ஒரு பெரிய நடிகையாக வேண்டும் என்று கனவு கண்டு அதற்காக உழைத்தாள். கனவும் நனவானது. லேடி மேக்பத்தாக நடித்து வெற்றி வாகை சூடினாள். ஆனால் அந்த வெற்றி நிறைய நாட்கள் நீடிக்கவில்லை. நோய்வாய்ப்பட்டு மூன்று ஆண்டுகளாக படுத்த படுக்கை. அந்த நேரத்தில் விவிலியத்தை வாசிக்கத் தொடங்கினாள். பழைய ஏற்பாட்டின் யாக்கோபு கதையோடு தன் வாழ்க்கையை ஒப்பிட்டு, இருள், கனவு, விழிப்பு, நோய், தோல்வி, தனிமை, வலி என அனைத்தையும் இணைத்து அவள் ஒரு மதிய வேளையில் (1841) எழுதிய பாடலே இது:

Nearer, my God, to Thee,
Nearer to Thee!
E'en though it be a cross
That raiseth me.
Still all my song shall be

Nearer, my God, to Thee,
Nearer, my God, to Thee,
Nearer to Thee

... .... ....
... .... ....

ஒவ்வொரு கல்லறை அருகிலும் மனித மனம் பாடும் பாடல் இது.

இலை சருகாகும் என்பது இயற்கை நியதி. தொட்டிலில் படுத்தவர்கள் கல்லறையிலும் படுக்க வேண்டும் என்பதும் இயற்கை நியதி. மரணம் வாழ்வின் எதிரி அல்ல. வாழ்விற்கு அர்த்தம் கொடுப்பதே மரணம் தான்.

பெத்தானியாவிற்கு வந்த இயேசுவைப் பற்றி இன்று சிந்திப்போம்.

'உன் நண்பன் லாசர் நோயுற்றிருக்கிறான்!' என்ற இயேசுவுக்குத் தந்தி அனுப்புகிறார்கள். ஆனால் அவர் வேண்டுமென்றே காலம் தாழ்த்துகிறார். அவரின் தாமதம் வியப்பூட்டுகிறது.

இறந்த லாசரின் கல்லறைக்கு அருகில் வருகின்றார்.

நம் வாழ்வில் நாம் ஒவ்வொரு நாளும் கல்லறைக்கு அருகிலேயே சென்று கொண்டிருக்கிறோம். இது எப்படி உண்மையோ அது போலவே கடவுளும் நம் கல்லறைக்கு அருகில் வந்து கொண்டிருக்கிறார் என்பதும் உண்மை.

கடவுள் நம் அருகில் வருகின்றார். இதுதான் இறப்பு நமக்குச் சொல்லும் செய்தி.

இறப்பு நமக்கு ஒன்றும் பயமல்ல. ஏனெனில் இறந்த பின் நமக்கு என்ன நடக்கும் என்று தெரியாதே?

ஒவ்வொரு நாளும் நாம் சந்திக்கும் இறப்புக்கள் நிறையவே இருக்கின்றன. நம் தோல்வி, நம் நோய், நம் தனிமை, மற்றவர்கள் நம்மேல் காட்டும் வெறுப்பு, மற்றவர்கள் நம்மைத் தவறாகப் புரிந்து கொள்ளுதல், வறுமை, பசி, அடிமைத்தனம் என ஒவ்வொரு நாளும் நிறைய இறப்புக்களை நாம் சந்திக்கின்றோம்.

இந்த நேரங்களில் நாம் நினைத்துக்கொள்ள வேண்டியது இதுதான்:

இவன் இறந்துவிட்டான்! இவள் தோற்றுவிட்டாள்! என உலகம் கல்லறை கட்டுகிறதா. கவலைப்பட வேண்டாம். இதோ அந்தக் கல்லறைக்கு அருகில் கண்களைக் கசக்கிக் கொண்டு கடவுள் நிற்கின்றார்.

இதை நினைக்கும் போதே மனம் சிலிர்க்கின்றது! புல்லரிக்கின்றது!

To view the song please click here...

Nearer My God, To Thee!

1 comment:

  1. Anonymous4/07/2014

    ".Nearer my God to Thee"..நான் அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்.அந்தப் பாடலில் இழையும் சோகத்தின் பின்னனி இன்று தான் விளங்கியது.நாம் இறக்கும் நேரங்களிலும் தோற்கும் நேரங்களிலும் இறைவன் கண்ணைக் கசக்கிக் கொண்டு நம்மருகில் வருகிறார் எனில் எத்தனை முறை வேண்டுமானாலும் இறக்கவும் செய்யலாம்; தோற்கவும் செய்யலாம்.இன்றைய Blog ஐப் படித்து முடிக்கும் போது என் மனசெல்லாம் சோகம் அப்பிக் கொண்டதென்னவோ உண்மை.

    ReplyDelete