Thursday, April 3, 2014

அவருக்கு நாம் என்ன கொடுப்போம்?

சவுல் தம் பணியாளரிடம், 'சரி, செல்வோம். ஆனால் அவருக்கு நாம் என்ன கொடுப்போம்? ஏனெனில் நம் பைகளிலிருந்த அப்பம் தீர்ந்து விட்டது. கடவுளின் அடியவருக்கு அன்பளிப்புத் தர எதுவும் இல்லையே? என்ன செய்வோம்?' என்றார். பணியாள் சவுலை நோக்கி, 'இதோ! என் கையில் இன்னும் மூன்று கிராம் அளவுள்ள வெள்ளி இருக்கிறது. இதைக் கடவுளின் அடியாருக்குத் தருவேன். அவர் நம் வழியை நமக்கு எடுத்துரைப்பார்' என்றான். (1 சாமுவேல் 9:7-9)

இந்த விவிலியப் பகுதியை ஒன்றிற்கு இரண்டு முறை வாசியுங்களேன். நிறைய விஷயங்கள் புலப்படும்.

சவுலும் அவரது வேலைக்காரரும் காணாமற் போன கழுதையைத் தேடி அலைகின்றனர். கழுதை எங்கும் அகப்படவில்லை. 'திரும்பிப் போய்விடலாம்!' என சவுல் சொன்னபோது அவரது வேலைக்காரர் 'கடவுளின் அடியவர் ஒருவரைப் பற்றிக்' கூறுகின்றார்.

இந்த வேலைக்காரர் இப்படி கூறவில்லை என்றால் நிகழ்வு எப்படி மாறியிருக்கும்? சவுல் அரசராயிருப்பாரா? கழுதைகள் கிடைத்திருக்குமா? சாமுவேலைப் பார்த்திருப்பார்களா? கடவுளின் திட்டத்தில் வேலைக்காரருக்கும் பங்கிருக்கிறது. கடவுளின் திட்டத்தில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று எவரும் இல்லை. எல்லோரும் முக்கியமானவர்கள்.

சவுலும் பெரிய மனசுக்காரர்தான். 'நீ என்னடா சொல்றது!' என்று வேலைக்காரனை மட்டம் தட்டாமல் வேலைக்காரன் சொல்லுக்குக் கட்டுப்படுகின்றார்.

கதையின் முக்கியமான பகுதி இனிதான்.

'கடவுளின் மனிதருக்கு என்ன கொடுக்கலாம்?' இது சவுலின் கவலை. கடவுளின் மனிதரை மட்டுமல்ல, எந்த மனிதரைப் பார்க்கச் சென்றாலும் ஏதாவது கொண்டு செல்ல வேண்டும் என்பது என் அம்மாவிடம் நான் கற்ற ஒன்று. ஒரு சிலர் 'பெருமையா' சொல்லுவாங்க: 'நான் யாரைப் பார்க்கப் போனாலும் எதுவும் வாங்கிட்டுப் போக மாட்டேன். நானும் மத்தவங்க வாங்கிட்டு வர்றத விரும்ப மாட்டேன். பொருட்களா முக்கியம். மனுசங்க தானே முக்கியம்'.

ஆனால் இதில் எனக்கு மாற்றுக் கருத்து. கட்டாயம் ஏதாவது வாங்கிக்கிட்டு போகணும். பொருட்களும் முக்கியம்தான். பொருட்கள் என்றால் என்ன? நம் உடலின் நீட்சி (extension) தான் பொருட்கள். சீப்பை வைத்து தலை சீவுகிறோம். ஆதி மனிதர்கள் தங்கள் விரல்களால் தங்கள் தலைகளைக் கோதிவிட்டிருப்பார்கள். இன்று நாம் விரல்களுக்குப் பதில் சீப்பை நீட்சியாகப் பயன்படுத்துகிறோம். நாம் பயன்படுத்தும் 'சாதக் கரண்டியைப்' பாருங்கள். உள்ளங்கை போலவே இருக்கும். நம் உள்ளங்கையின் நீட்சியே சாதக்கரண்டி. நம் காலின் நீட்சியே நாம் பயன்படுத்தும் சைக்கிள், கார், ஆட்டோ. நம் காது மற்றும் வாயின் நீட்சியே மொபைல் ஃபோன். நாம் ஒருவரைப் பார்க்கப் போகிறோம். பார்த்துவிட்டு வந்து விடுகிறோம். ஆனால் நம் நீட்சியாக நாம் அங்கே விட்டு வந்த பொருள் அவர்களோடு இருக்கிறது. வெளிநாடுகளில் தங்களுக்கு யாராவது அன்பளிப்பாகக் கொடுத்ததை வேறு யாருக்கும் கொடுக்க மாட்டார்கள். மற்றவர்கள் தங்களுக்குத் தருவது அவர்களின் நீட்சி இன்றும் அதை மற்றவர்களோடு பங்கு போடுவது தவறு என்பதும் அவர்களின் சித்தாந்தம். அதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது.

நாம் மற்றவர்களுக்குக் கொடுக்கும் போது நம்மையை நீட்சியாகக் கொடுக்கிறோம். இது சவுலிடம் நாம் கற்க வேண்டிய ஒன்று.

வேலைக்காரன் தான் இன்று எனக்குப் பிடித்த கேரக்டர். தலைவனிடம் இல்லாத ஒன்று வேலைக்காரனிடம் இருக்கிறது. வெள்ளி. இருப்பது மட்டுமல்லாமல் அதைக் கொடுக்கவும் துணிகிறான் வேலைக்காரன். 'நம்மிடம் உள்ள வெள்ளியைக் கொடுக்கிறோமே! கொடுத்தால் சவுல் திரும்பக் கொடுப்பாரா? அல்லது கொடுக்க மாட்டாரா?' என்ற பயமில்லாமல் விரித்துக் கொடுக்கிறான் (generosity). பல நேரங்களில் தங்களிடம் ஒன்றும் இல்லாதவர்களே வேகமாக தங்களை மற்றவர்களுக்குக் கொடுப்பார்கள்.

'கொடுக்கும் போது நமக்குக் குறைவதில்லை!' என்பதை எவ்வளவு மௌனமாக அறிந்து வைத்திருக்கிறான் வேலைக்காரன். 'உன் கழுதைதானே. நீ தேடு. கிடைத்தால் என்ன? கிடைக்காவிட்டால் என்ன?' என்று நினைக்கவில்லை வேலைக்காரன். 'கூலிக்கு மாரடிப்பது' என்ற சொல்லாடல் உண்டு. செய்கின்ற ஒன்றால் எனக்கு என்ன ஆதாயம் என்று கருதாமல் தன்னிடம் உள்ள அனைத்தையும் தரத் துணிகின்றான் பணியாளன்.

என்னைப் போன்ற இறைப்பணியாளர்களுக்கு இந்தப் பணியாள் இன்று ஒரு நல்ல பாடம். என் நேரத்தை, என் அறிவை, என் ஆற்றலை, என் பணத்தை மற்றவர்களோடு பகிரும் போது அது குறைவதில்லை எனவும், பெருகத்தான் செய்யும் எனவும் கற்றுக்கொடுத்துவிட்டார் இந்தப் பணியாளர்.

கொடுக்கும் போது நாம் கடவுளாகிறோம்.

கையைக் கும்பிட்டு வழிபடும் ஆன்மீகத்தைவிட,
கையை விரித்துக் கொடுக்கும் ஆன்மீகமே சிறந்தது
என்பது சவுலின் வேலைக்காரர் சொல்லும் செய்தி.

'பெறுவதற்காக மட்டும் கைகளை விரித்து வைத்திராதே.
கொடுக்கும் நேரத்திலோ உன் கைகளை மூடிக் கொள்ளாதே'
என்கிறது சீராக்கின் ஞானம் (4:31).

1 comment:

  1. Anonymous4/04/2014

    கொடுத்தலின் பெருமை பற்றி நிறையப் பகிர்ந்துள்ளீர்கள்.இன்றையப் பகுதியிலும் பணியாளனின் வாயிலாக " இறைக்கிற கிணறுதான் சுரக்கும்" என்பதைப் புரிய வைத்துள்ளீர்கள்.கொடுப்பவரின் கை ஓங்கியும் பெறுபவரின் கை இறங்கியும் இருப்பதிலிருந்தே கொடுத்தலின் பெருமை புரியுமே! கொடுப்போம்....அலுங்கிக் குலுங்கிக் கொடுப்போம்.." இந்த சின்னஞ்சிறு சிரார்க்கு செய்த போதெல்லாம் எனக்கே செய்தீர்கள்" என்ற வார்த்தைகளுக்கு நம்மைத் தகுதியாக்குவோம்.

    ReplyDelete