Tuesday, April 1, 2014

இது என் உடல்!

'எடுத்து, உடைத்து, நன்றி செலுத்தி, கொடுத்து' தன் சீடர்களிடம், 'இது என் உடல்!' என்கின்றார் இயேசு. இயேசுவின் உடலை உண்கின்றார்கள். அவர்கள் காட்டுமிராண்டிகள் என உரோமைக் குடிமக்கள் தொடக்கக் கிறித்தவர்களை ஏளனம் செய்தனர். தொடக்கமுதல் இன்றுவரை நம்மை ஒரே உடலாகக் கூட்டிச் சேர்ப்பது இயேசுவின் உடல். எதற்காக இயேசு தன் உடலை நமக்குத் தர வேண்டும்? உடலின் பொருள் என்ன? உயிர் என்பது காண முடியாதது. இந்தக் காண முடியாத, தொட முடியாது உயிர் வாழ்வதற்குத் காண்கின்ற, தொடுகின்ற ஒரு உடல் அவசியம். உடல் நமக்கு ஸ்திரத்தன்மையைத் தருகின்றது. இந்த உடலின் வழியாகவே நாம் இந்த உலகில் கால் ஊன்றுகிறோம். உடல் இல்லையென்றால் நாம் வெறும் ஆவிதான். இந்த உடல் ஒரு அற்புதமான படைப்பு. உடலின் இயக்கம் குறித்து அதிகமாக வியக்கின்றார் திருப்பாடல் ஆசிரியர் (திபா 139).

உடல் வழியாக நாம் நம்மை மற்றவர்களுக்குத் திறக்கின்றோம். இந்த உடல்தான் நம்மை மற்றவரோடு இணைக்கின்றது. இந்த உடலின் வழியாகவே நாம் உள்வாங்குகிறோம். நம்மை இடத்திற்கும், காலத்திற்கும் கட்டுப்பட்டவர்களாக வைப்பது இந்த உடல்தான். உடல் என்று நாம் சொல்லும்போது உடலின் வழியாக நாம் செய்யும் மூன்று முக்கியமான வேலைகளை நினைக்க வேண்டும். ஒன்று மொழி. உடல்தான் மொழியைச் சாத்தியமாக்குகிறது. மொழி ஒருவர் மற்றவரை இணைக்கும், பிரிக்கும் ஊடகமாக இருக்கின்றது. நாம் பேசும் வார்த்தைகள் மட்டுமல்ல, நம் உடலின் அனைத்து இயக்கங்களும் மொழிதான். இரண்டு நம் பாலியல்பு. உடல் தான் நம்மை ஆண் எனவும், பெண் எனவும் காட்டுகிறது. இந்தப் பிரிவு ஒருவர் மற்றவரைப் பிரித்துப் பார்ப்பதற்கோ, அடிமைப்படுத்துவதற்கோ, பயன்படுத்துவதற்கோ அல்ல. ஒருவர் மற்றவரை நிறைவு செய்வதற்கு. மூன்று வேலை. உடல் தான் நம்மை வேலைசெய்பவர்களாக மாற்றுகிறது. நாம் செய்யும் வேலை நமக்கும், பிறருக்கும், நம் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் பயன் தந்து இறைவனோடு கரம் கோர்க்கும் உடன் படைப்பாளிகளாக மாற்றுகிறது. உடல் இல்லையென்றால் நம் ஓவியம், நடனம், இசை என்ற எந்த அழகியலும் வந்திருக்க வாய்ப்பில்லை.

நாம் உண்கின்ற உணவு நம் உடலின் ஒருபகுதியாக மாறிவிடுகிறது. இயேசுவின் உடலை நாம் உண்கின்றோம் என்றால் இயேசு நம் உடலாக மாற வேண்டும். நம் மொழி, நம் பாலியல், நம் வேலை என அனைத்திலும் இயேசுவின் பிரசன்னம் இருக்க வேண்டும். உடலைப் பல நேரங்களில் சாதி, மதம், கலாச்சாரம், கறுப்பு, வெள்ளை எனப் பிரிவுபடுத்தும் கருவியாக நாம் பார்க்கும் நிலை மாற வேண்டும்.

இயேசு தரும் இரண்டாவது கொடை இரத்தம். இரத்தம் என்றால் வாழ்வு என்பது பழைய ஏற்பாடும், இன்றைய அறிவியலும் நமக்குச் சொல்லும் பாடம். தொழில்நுட்பம், விஞ்ஞானம், அறிவியல் வளர்ந்தாலும், நம் இரத்தத்தின் வகைகளைக் கண்டறிந்தாலும், இன்னும் நம் ஆய்வுக்கூடங்களில் தயாரித்து விட முடியாத ஒரு ஆச்சர்யமாகத்தான் திகழ்கின்றது இரத்தம். பழைய ஏற்பாட்டின் ஆடு, மாடுகளின் இரத்தம் செய்ய முடியாத ஒரு மாபெரும் ஒருங்கிணைப்பை தன் இரத்தத்தின் வழியாகச் செய்து முடிக்கின்றார் இயேசு. நிறைவுபெற்ற பாவம் போக்கும் பலியாகத் தன்னையே ஒப்படைத்து விண்ணையும், மண்ணையும் ஒன்றாக்குகின்றார் இயேசு. 'என் இரத்தத்தின் இரத்தமே!' என்று இன்று அரசியல்வாதிகள் நம்மோடு உறவு கொள்வது போலியாக இருக்கின்றது. ஆனால் இயேசுவின் இரத்தத்தில் நாம் கொண்டுள்ள இணைப்பு உண்மையானது. ஒரே இரத்தத்தில் நாம் கலக்கின்றோம் என்றால் பிரிவினைக்கும் ஏற்றத்தாழ்விற்கும் இடமில்லை. ஒருவர் மற்றவரின் செந்நீரையும், கண்ணீரையும் சிந்தவும் நமக்கு உரிமையில்லை. உலகம் இன்று வரை எவ்வளவு பேரின் செந்நீரைச் சிந்தியிருக்கின்றது? காயின் தன் சகோதரன் ஆபேலின் இரத்தம் நிலத்தில் விழக் காரணமானான். ஆனால் புதிய ஆபேலாகிய கிறிஸ்துவின் இரத்தம் அனைவரையும் நிலத்திலிருந்து தூக்கிவிடக் காரணமானது.

இன்று நாம் ஆண்டவரின் பாத்திரத்தில் கையிடுகின்றோம். ஒரே உடல். ஒரே இரத்தம். அவரின் பாத்திரத்தில் கையிடும் உரிமை நமக்கு இருக்கின்றது என்றால் அவரைப் போலவே வாழும் கடமையும் நமக்கு இருக்கத்தானே செய்கின்றது. நாம் அப்படி இல்லாதபோது நம்மையும் தூய பவுலடியார் இப்படிச் சாடுவார்:

'...நீங்கள் சபையாகக் கூடி வரும்போது உங்களிடையே பிளவுகள் இருப்பதாகக் கேள்விப்படுகிறேன்...இந்நிலையில் நீங்கள் ஒன்றாகக் கூடி வந்து உண்பது ஆண்டவரின் திருவிருந்து அல்ல...எவராவது தகுதியற்ற நிலையில் இந்த அப்பத்தை உண்டால் அல்லது ஆண்டவரின் கிண்ணத்தில் பருகினால் அவர் ஆண்டவரின் உடலுக்கும் இரத்தத்திற்கும் எதிராகக் குற்றம் புரிகிறார்...நீங்கள் ஆண்டவருடைய கிண்ணத்திலும் பேய்களுடைய கிண்ணத்திலும் பருக முடியாது. நீங்கள் ஆண்டவரின் பந்தியிலும் பேய்களின் பந்தியிலும் பங்கு கொள்ள முடியாது' (1 கொரி 12:17-34. 10:21).

2 comments:

  1. Anonymous4/01/2014

    இன்றையப் பகுதியின் ஒவ்வொரு வரியுமே தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய மடலின் சாயலில் இருக்கிறது.இயேசுவின் திரு உடலையும் இரத்தத்தையும் அருந்த முடிவது நமக்குக்கிடைத்துள்ள அரிய பேறு.அவரின் பலத்தால் நம் பலவீனங்களையும் அவரின் நிறைகளால் நம் குறைகளையும் சமன் செய்யக்கிடைத்த தருணம்.இதை அருந்துவதன் புனிதம் காப்போம்; நாமும் புனிதராக மாற,வாழ முயல்வோம்.

    ReplyDelete
  2. Anonymous4/02/2014

    ஆம், தந்தையே அழகாக கூறினிர்கள். என் உள்ளத்தில் பல நாட்களாக இருந்த கேள்வி. நம்மில் பலர் திருப்பலிக்குச் செல்கிறோம். அங்கு அப்பத்தின் வடிவிலுள்ள நற்கருணை ஆண்டவரைப் பெற்றுக்கொள்கிறோம். பாவம் செய்து விட்டு பாவசங் கீர்த்தனம் செய்யாமல் திவ்விய நற்கருணையைப் பெற்றுக்கொள்வது மகா பாவமான செயல். அதன் மூலம் நாம் மீண்டும் ஒரு பாவத்தைக் கட்டிக்கொள்கிறோம். இவ்வாறு பரிசுத்த ஆவியானவர் நம்மை எச்சரித்தது "ஆண்டவருடைய உடல் என உணராமல் உண்டு பருகுபவர் தம் மீது தண்டனைத் தீர்ப்பையே வருவித்துக் கொள்கிறார். இதனால்தானே, உங்களில் பலர் வலுவற்றோராயும் உடல்நலமற்றோராயும் இருக்கின்றனர், மற்றும் பலர் இறந்தும் விட்டனர். ஆனால் நம்மை நாமே சோதித்தறிந்தோமானால் நாம் தீர்ப்புக்கு ஆளாக மாட்டோம்." ? நம் உள்ளத்தை ஆராயாமல், பாவசங் கீர்த்தனம் செய்யாமல், ஆன்ம சோதனை செய்யாது, துணிந்து பாவம் செய்கிறோம். ஏன் என்று தான் புரியவில்லை. இதனை அறியாமை என்று செல்வதா, இல்லை விளையாட்டு தனம் என்று செல்வதா.

    ReplyDelete