Friday, July 1, 2016

நீதிமொழிகள் - 14

இன்றைய வலைப்பதிவு நம் வலைப்பூவின் 1000ஆவது இதழ்.

இறைவனுக்கும், உங்களுக்கும், என் எழுத்துக்களை இரசித்து அன்றாடம் பின்னூட்டமிடும் என் அம்மாவுக்கும், என் தோழர்களுக்கும் இனிய நன்றிகள்.

'நெடுநாள் எதிர்நோக்கியிருப்பது மனச்சோர்வை உண்டாக்கும்.
விரும்பியது கிடைப்பது சாகாவரத்தைப் பெறுவது போலாகும்!'

(நீமொ 13:12)

இந்த ஒரு மாதமாக புனேயில் இருக்கிறேன். என் உடன் மாணவர்களை வெளியிலிருந்து என் ஹாஸ்டலுக்கு அழைத்து வருவேன் அடிக்கடி. 'உங்களுக்கு காஃபியா, அல்லது டீயா?' என்று நான் கேட்டால், 90 சதவிகத மாணவர்கள், 'ஏதாச்சும்' என்றே பதில் சொல்கின்றனர். 'எது இருந்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இதுவா?' அல்லது 'எனக்கு இது பிடிக்கும், இது பிடிக்காது என்று சொல்ல முடியாத நிலையில் இவர்கள் இருக்கிறார்களா?' என்று தெரியவில்லை.

குறுகிய பொழுது எதிர்நோக்கும் ஒன்றைப் பற்றியே நமக்கு சில நேரங்களில் தெளிவில்லாமல் இருக்கும்போது, நெடுநாள் நோக்கியிருப்பது தெளிவாக இருக்குமா?

11 ஆண்டுகளுக்கு முன் என்னிடம் யாராவது, 'உன் நெடுநாள் ஆசை எது?' என்று கேட்டால், நான் உடனே 'விமானப்பயணம்' என்று சொல்லியிருப்பேன். ஆனால் இந்த நெடுநாள் ஆசை என் வாழ்வில் நடந்தேறிய அந்த முதல் நிகழ்வு மிகவும் சோகமான நிகழ்வு. சின்ன வயதில் எங்க ஊரு நத்தம்பட்டி வானில் உச்சியில் விமானம் பறப்பது தெரிந்தாலே, பாதி சோற்றை தட்டில் போட்டுவிட்டு ஓடிச் சென்று பார்ப்பேன். புவிஈர்ப்பு விசையை மனிதர் தோற்கடிக்க முடியும் என்ற சிந்தனையின் குழந்தையே இந்த அலுமினியப் பறவை.

நெடுநாள் எதிர்நோக்கியிருந்த இந்த விமானப் பயணம் அமைந்தது என் அப்பாவின் இறப்பில்தான். இன்றும் விமானத்திற்குள் நுழையும்போதெல்லாம் அந்த முதல் அனுபவம் கசப்பாய் வந்து போகிறது.

நெடுநாள் எதிர்நோக்கியிருந்த ஒன்று கிடைத்தால் சாகாவரம் பெற்றது போலாகும் என்கிறார் நீதிமொழிகள் ஆசிரியர்.

நிச்சயம் இவர் விமானப்பயணம் பற்றி பேசியிருக்க வாய்ப்பில்லை.

ஆனால், எதிர்நோக்கு என்ற ஒன்றுதான் நம் வாழ்விற்கு ருசியைக் கொடுக்கின்றது. எதிர்நோக்கு எட்டாக்கனியாக இருப்பது போல தெரிந்தால் மனம் சோர்வடைந்துவிடுகிறது.

'நான் விரும்பியது கிடைத்தது' என்று ஒரு பெரிய பட்டியல் போட்டுப் பார்க்கலாமே.

அப்படிப் பார்த்தால் எனக்கு டீ பிடிக்குமா, காஃபி பிடிக்குமா என்ற கேள்விக்கும் விடை கிடைக்கும்.

இன்னும் சொல்வேன்...