Friday, January 1, 2021

நீங்கள் அறியாத ஒருவர்

இன்றைய (2 ஜனவரி 2021) நற்செய்தி (யோவா 1:19-28)

நீங்கள் அறியாத ஒருவர்

புத்த மடாலயம் ஒன்றில் நடந்த நிகழ்வு என்று ஒன்று சொல்லப்படுவதுண்டு.

அந்தப் புத்த மடலாயத்தில் எப்போது பார்த்தாலும் துறவிகள் நடுவே சண்டை, சச்சரவுகளும், பிரிவினைகளும், போட்டி, பொறாமை உணர்வுகளும் இருப்பதுண்டு. இவற்றைச் சரி செய்வதற்காக வெளியே இருந்து ஒரு நபர் அழைத்துவரப்படுகின்றார். வந்தவர், 'உங்கள் நடுவே ஒருவர் புத்தராக இருக்கிறார்' என்று சொல்கின்றார். அந்த நாள் முதல் அந்த மடாலயத்தில் துறவிகளின் செயல்பாடுகள் மாறத் தொடங்குகின்றன. ஒருவர் மற்றவரைப் பார்த்து, 'இவர் புத்தராக இருப்பாரோ!' என எண்ணிக் கொள்கின்றனர். தனக்கு அடுத்திருக்கும் மற்றவரை நன்முறையிலும், தாராள உள்ளத்தோடும் நடத்தத் தொடங்குகின்றனர். அமைதியும், மகிழ்ச்சியும் தவழும் இல்லமாக அது மாறுகிறது.

மிகவும் எளிதான தாரக மந்திரம்: 'உங்கள் நடுவே புத்தர் இருக்கிறார்'

இன்றைய நற்செய்தி வாசகத்தில், எருசலேமிலுள்ள யூதர்கள் திருமுழுக்கு யோவானிடம் ஆள் அனுப்பி, 'நீர் யார்?' எனக் கேட்க, அவர் தான் யார் அல்ல என்பதையும், தான் யார் என்பதையும் மிகவும் தெளிவாக வரையறுக்கின்றார். வரையறையின் இறுதியில், 'நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்' எனச் சொல்கிறார்.

அவர்கள் நடுவே நிற்கின்ற அந்த ஒருவரைக் கண்டுகொள்ளாத எருசலேம் யூதர்கள், இன்னொருவரைத் தேடிச் செல்கின்றனர்.

'நாம் அறியாத ஒருவர்' நம்முள் இருவகை உணர்வுகளை எழுப்ப முடியும்.

ஒன்று, பயம். எடுத்துக்காட்டாக, நான் ஒரு நீண்ட பயணம் செல்கிறேன். அந்தப் பயணத்தில் என் அருகில் நான் அறியாத ஒருவர் வந்து அமர்கிறார். என் பயணம் முழுவதும் எனக்குக் கலக்கமாக மாறிவிடுகிறது.

இரண்டு, நம்பிக்கை. எடுத்துக்காட்டாக, நான் ஏதோ ஒரு பணத்தேவையில் இருக்கிறேன். என் தேவையை எப்படியோ அறிகின்ற இன்னொருவர் எனக்கு உதவி செய்ய முன்பின் தெரியாத ஒருவர் முன்வருகின்றார்.

அறியாத ஒருவர் நம் அருகில் இருப்பதே இறையனுபவம்.

அறியாத ஒருவரைக் கண்டுகொள்ள அழைப்பு விடுக்கிறார் திருமுழுக்கு யோவான்.

அவர் அறியப்படாத நபராக இருந்தாலும் அவரின் மதிப்புக்குக் கீழ் தன்னையே தாழ்த்திக்கொள்கின்றார்.


4 comments:

  1. அறியாத ஒருவர் நம் அருகில் இருப்பதே இறையனுபவம்.👌

    நன்றி🙏

    ReplyDelete
  2. நாம் அறியாத ஒருவர் நம்மருகில் இருப்பதே “இறையனுபவம்”.அவர் நம்மைவிட மதிப்புக்குரியவராயிருந்தால் நாம் நம்மைத் தாழத்திக் கொள்வதில் தப்பில்லை.... இன்றையப் பதிவின் புரிதல்...

    “உங்களிடையே ஒரு புத்தர் இருக்கிறார்”.., ஒரு இடத்தின் அமைதியையும், மகிழ்ச்சியையும் காக்க இப்பேர்ப்பட்டத் தாரக மந்திரங்களை பயன்படுத்துவதில் தப்பில்லை.

    எவ்வழி சென்றால் நல்வழி கிடைக்கும்? அனைத்து யுத்திகளின் ஆசானுக்கு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete